பொதுவாக குற்றம் செய்பவர்கள் சிறையில் தண்டனை அனுபவிக்கும் போது தங்களது குடும்பத்தினரின் உயிரிழப்பு, மகன், மகளின் திருமணத்திற்காகவும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாலும் பரோல் கேட்பது வழக்கம். அதன்படி கோர்ட்டும் கைதிகளுக்கு பரோல் வழங்கும். அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள கனகபுரா தாலுக்கா அருகே உள்ள கிராமத்தில் சந்திரன் (36) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இதற்கு அந்தப் பெண்ணின் கணவன் இடையூறாக இருந்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் கணவனை சந்திரா கொலை செய்துள்ளார். இந்த கொலை வழக்கில் சந்திராவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் கனகபுராவிலுள்ள தனது தந்தையின் நிலத்தில் விவசாயம் செய்யப் போவதாகவும், அதற்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் சந்திரா மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் இருந்து பரோலில் வெளியே வரவில்லை என்பதையும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சந்திரா கடந்த 10 ஆண்டுகளாக பரோலில் வெளியே செல்லாததை கருத்தில் கொண்டு, தந்தைக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்பதற்காக அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட்டார். மேலும் அந்த 90 நாட்களும் அவர் விவசாய பணிகளை மட்டுமே செய்ய வேண்டும், வேறு எந்த சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.