சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் ஆய்வு மைய கட்டுமான பணிகளை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் விழாவில் பேசி அமைச்சர் கூறியதாவது, வகுப்புக்கு ஒரு பெண் மட்டுமே பயின்று வரும் காலம் போய் 80 சதவீதம் பெண்கள் பயில்வதற்கு திராவிட இயக்கமே காரணம். பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞரின் கொள்கைகளை இன்றைக்கு திராவிடம் ஆட்சியாக முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். அயலி திரைப்படம் பார்த்தேன் தமிழகத்தின் வரலாற்றை உருவாக்கியுள்ளது.

அந்த கதையில் பெண் குழந்தைகளை படிக்க விடாமல் ஊர் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. ஆனால் கட்டுப்பாடுகளை தவிர்த்து பெண்கள் கல்வி கற்க முயற்சி செய்வது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. அதெல்லாம் மாற்றி அமைத்து எல்லோருக்கும் கல்வி பயிலும் வாய்ப்பினை உருவாக்கியது திராவிட மாடல்தான். மாணவிகள் தமிழ்நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். புத்தகத்தை மட்டுமே படிக்காமல் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டால் தான் சரியாக இருக்கும். எல்லாரும் ஒருங்கிணைந்து இந்த பணியை செய்ய வேண்டும்.

மேலும் தமிழகத்திற்கு என தனியாக கல்விக் கொள்கையை வகுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதாவது ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு என்பதை ஏற்க முடியாது. தமிழ்நாடு, தமிழ் உணர்வு என்று செயல்பட வேண்டும். வெளிநாட்டிற்கு ஆங்கிலம், உள்ளூருக்கு தமிழ் என இரண்டு மொழிகள் மட்டுமே போதும் இரு மொழிக் கொள்கை தமிழகத்திற்கு போதும். இதனை எதிர்த்து எந்த திட்டம் வந்தாலும் அதனை மீறி இரு மொழிக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் நிச்சயம் செயல்படுத்துவார். எங்கு சென்றாலும் மொழி உணர்வு நாட்டு உணர்வு இருக்க வேண்டும். அனைவரும் சமம் என்பதை ஏற்று அனைவருக்கும் பரப்ப வேண்டும் என கூறியுள்ளார்.