கர்நாடகா மாநிலத்தில் சென்ற 2022-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அம்மாநில அரசு தடைவிதித்தது. இதற்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். அம்மாநில அரசின் இத்தடை உத்தரவுக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கல்வி நிலைய‌ங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று தீர்ப்பளித்தது.

இதையடுத்து இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதேபோன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சமூகஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை 2 நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது. சென்ற அக்டோபர் மாதம் இவ்வழக்குகளில் இரண்டு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.

அதாவது, ஹிஜாப் தடை உத்தரவு செல்லும் என ஒரு நீதிபதியும், அம்மாநில அரசின் உத்தரவை ரத்துசெய்து ஒரு நீதிபதியும் தீர்ப்பு அளித்தனர். இவ்வாறு இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பை வழங்கியதால் கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு இவ்வழக்குகள் மாற்றப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஹிஜாப் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாணவிகள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றமானது தெரிவித்து உள்ளது. அதோடு இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும் உறுதியளித்து உள்ளது.