கடலூர் மாவட்டத்தில் உள்ள காடாம்புலியூர், மேட்டுக்குப்பம், கீழக்குப்பம், நடுகுப்பம், மேலிருப்பு, காங்கேயன் குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் நேற்று காலை 11:30 மணிக்கு பயங்கர சத்தம் கேட்டதை உணர்ந்தனர். இதனால் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறியடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்நிலையில் எங்கோ வெடிகுண்டு வெடித்து விட்டது, விமானம் விபத்துக்குள்ளானது என பொதுமக்கள் மத்தியில் தகவல் பரவியது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது காடாம்புலியூர், முத்தாண்டி குப்பம் பகுதியில் நேற்று காலை 11:30 மணிக்கு பயிற்சி விமானம் தாழ்வாக பறந்த போது சத்தம் கேட்டது தெரியவந்தது. இது குறித்து பொதுமக்களிடம் விளக்கமாக கூறப்பட்டது. அதன் பின்னர்தான் அனைவரும் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.