திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட எட்டு பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி இந்திய ராணுவம் வெளியிட்ட ராணுவ வீரர் பணியிடத்திற்கான அறிவிப்பில் விண்ணப்பித்து, அனைத்து தகுதி தேர்விலும் கலந்து கொண்டு,  தேர்ச்சி பெற்றோம்.ஆனால் எங்களது பெயர் அந்த அறிவிப்பாணையில் இடம் பெறவில்லை.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது,  காலியிடங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இது சட்ட விரோதம். எனவே இந்த அறிவிப்பாணையை ரத்து செய்துவிட்டு,  விதிகளை பின்பற்றி,  முழுமையாக அறிவிப்பானை வெளியிட்டு,  ராணுவ வீரர்களை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே இந்த வழக்கில் மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் மற்றும் முதன்மை ராணுவ அதிகாரி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை மத்திய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் அறிக்கையாக தாக்கல் செய்தார்.

அதனை படித்துப் பார்த்த நீதிபதி,  நாட்டில் மத்திய அரசு வழக்கறிஞர் கொடுத்த தகவல்கள் அத்தனையும் தவறாக இருக்கிறது.தவறான தகவல்களை இந்த நீதிமன்றத்திற்கு தெரிவித்து இருக்கிறீர்கள். நாட்டின் பாதுகாப்பில் ஈடுபடும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளே இவ்வாறு தவறான தகவல்களை தரலாமா ?

பிறகு நாட்டின் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கும் என கேள்வி எழுப்பியதோடு,  உங்களின் சிஸ்டமே சரியில்லை என கூறி இந்த வழக்கில் நான் மனுதாரர்களுக்கு ஆதரவான ஒரு தீர்ப்பை தான் வழங்க இருக்கிறேன் என சொல்லி,   தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கை ஒத்தி வைத்து இருக்கிறார்.