மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், காதலனால் ஏமாற்றப்பட்ட இளம்பெண் ஒருவர், அவரது காதலனின் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்று குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை இரவு சென்ட்ரல் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்தது.

கார்கோன் பகுதியைச் சேர்ந்த அந்த பெண், தனது காதலன் என்று கூறப்படும் ஆவேஷ் என்பவரின் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆவேஷ் தன்னை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த போதிலும், வேறொரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியதாக அந்த பெண் குற்றம் சாட்டியதாக காவல்துறை தெரிவித்தது. இதனால் மனமுடைந்த அவர், மூன்றாவது மாடியில் இருந்து குதித்தார்.

அதிர்ஷ்டவசமாக, கட்டிடத்தின் கீழே இருந்த மின்கம்பிகளில் சிக்கியதால் அவரது உயிர் தப்பியது, ஆனால் கைகளிலும், கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இந்த சம்பவத்தின் வீடியோ வியாழக்கிழமை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்திற்கு பிறகு, ஆவேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதற்கு முன்பு, அந்தபெண் ஆவேஷ் மீது திருமண வாக்குறுதியின் பேரில் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்திருந்தார், இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது, இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது, ஆனால் பாதிக்கப்பட்ட பெண் இதுவரை எந்த புகாரையும் அளிக்கவில்லை அல்லது வாக்குமூலம் கொடுக்கவில்லை.