மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில், கவுரவக் கொலை தொடர்பான அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது. 45 வயதான சையத் ஷேகர் என்ற நபர், தனது 17 வயது மகளை, உறவினரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்ளார். ஆனால் அதற்கு மகள் மறுத்ததால், அவளை கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த கொடூர சம்பவம் புதன்கிழமை அதிகாலையில், குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களது வீட்டில் நடந்ததாக காவல்துறை தெரிவித்தது. ஷேகர், ஒரு வாகன ஓட்டுநராக பணிபுரிந்தவர், தனது மகளுக்கு உறவினரின் மகனுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், மகள் இந்த முடிவை எதிர்த்ததால், கடந்த மூன்று நாட்களாக வீட்டில் தொடர்ந்து வாக்குவாதங்கள் நடந்தன.

இதனால் கடந்த ஆகஸ்ட் 19 இரவு, ஷேகர் தனது மனைவிக்கு, அவர் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளி என்பதால், வழக்கமான மருந்துகளுடன் தூக்க மாத்திரைகளையும் கொடுத்து, அவர் உறங்குவதை உறுதி செய்தார். பின்னர், தனது மகளின் அறைக்கு சென்று, அவள் தூங்கிக் கொண்டிருந்தபோது, தலையணையால் மூச்சுத்திணறச் செய்து கொலை செய்தார்.

வீட்டில் இருந்த மற்ற இரு மகன்கள், 12 மற்றும் 8 வயதுடையவர்கள், இந்த சம்பவத்தை அறியாமல் இருந்தனர். பின்னர், ஷேகர் தற்கொலைக்கு முயன்றார்; முதலில் தனது மணிக்கட்டை வெட்டி, மார்பில் குத்த முயன்றார், ஆனால் அது தோல்வியடையவே, தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

இருவரின் உடல்களும் ஹிங்கோலி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஷேகரின் சகோதரரின் புகாரின் அடிப்படையில், ஹிங்கோலி நகர காவல்துறை, பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவியது.