தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்குகளில் இருக்கும் கையிருப்பு பொருட்களை ரேஷன் கடைகளுக்கு பிரித்து வழங்குவது தொடர்பாக கோவையில் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ரேஷன் அட்டை பெறுவதற்கு பொதுமக்கள் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் அவர்களுக்கு அட்டை வழங்க வேண்டும். இதே நடைமுறையில் ரேஷன் அட்டை தொலைந்தாலும் நகல் வழங்க வேண்டும்.

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் மற்றும் கண் கருவிழி போன்றவைகளை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்த மாதத்திற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் கியூ ஆர் கோடு ஸ்கேன் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டிற்கு மாதம் ஒன்றுக்கு 23 ஆயிரம் தான் கோதுமை தேவைப்படும் நிலையில் அதை மத்திய அரசு 8 டன்னாக குறைத்துள்ளது. இது தொடர்பாக நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் டெல்லி சென்று கேட்க இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கப்பட இருக்கிறது. அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டத்தை விரிவு படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார். மேலும் இதன் மூலம் தமிழக ரேஷன் கடைகளில் விரைவில் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.