கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில் கல்யாணசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஜோதிஷ், ஹரிஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களது வீட்டில் கட்டிட வேலை நடந்து வந்தது. அந்த வேலைகளை கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாபு என்பவர் செய்து வந்தார். கடந்த 11-ஆம் தேதி விஜயலட்சுமி வீட்டில் தனியாக இருந்ததை அதை அறிந்த பாபு விஜயலட்சுமியின் வாயை பொத்தி, கை, கால்களை கட்டிப்போட்டு கத்தியை காட்டி மிரட்டி பீரோவில் இருந்த 20 போன்ற தங்க நகை, பத்தாயிரம் ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இதனையடுத்து பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த ஹரிஷ் தனது தாயை கட்டி போட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கட்டுகளை அவிழ்த்து விட்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த பாபுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 18 1/4 சவரன் தங்க நகை, செல்போன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.