ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கிய நிலையில், முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்திருந்தது.

உஸ்மான் கவாஜா 104 ரன்களிலும், கிரீன் 49 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியுள்ளது. இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரை ஜடேஜா வீசினார். கிரீன் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார். உஸ்மான் கவாஜா-கிரீன் ஜோடி ஆட்டமிழக்காமல் நிதானமாக விளையாடினர்.  இன்றைய உணவு இடைவேளை வரை  ஆஸ்திரேலிய அணி 347/4 என்ற வலுவான நிலையில் இருந்தது. இதில் அதிகபட்சமாக கவாஜா 150 ரன்களுடன், கிரீன் 95 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 2-ம் நாள் போட்டியின் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 167.2 ஓவருக்கு 480 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக கவாஜா 180 ரன்களும், கிரீன் 114 ரன்களும் எடுத்தனர். மேலும் இந்திய அணியில் பந்து வீச்சில் அஸ்வின் 6 விக்கெட்டுகள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.