சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், போலி ஆவணங்களை சமர்ப்பித்த சிலருக்கு 20 கோடியே 52 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளனர். போலி ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திரன் என்பவர் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் அந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் 15 பேரை கைது செய்துள்ள நிலையில் வழக்கின் விசாரணை மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது ஏற்கனவே தாக்கல் செய்த அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்துள்ளதாக கூறிய நீதிபதிகள் சிபிசிஐடி போலீசாரின் வழக்கு விசாரணை மிகவும் மந்தமாக இருப்பதாகவும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று அதிருப்தி தெரிவித்தனர்.

அதன் பிறகு இழப்பீடு வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா மூன்று முறை வழக்கில் விசாரணைக்கு ஆஜரான நிலையில் தற்போது எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை என்று கூறுவது சிபிசிஐடி போலீசார் எவ்வளவு மந்தமான முறையில் செயல்படுகிறார்கள் என்பதை தெளிவான முறையில் காட்டுகிறது என்றும் நீதிபதிகள் கூறினார்கள். மேலும் சிபிசிஐடி போலீசார் சரியான முறையில் செயல்படவில்லை என்றால் வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு‌ மாற்றி விடுவோம் என்று எச்சரிக்கை நீதிபதிகள் சிபிசிஐடி போலீசாருக்கு ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்து வழக்கின் விசாரணையை பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். ‌