தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி திருப்பதி காலனியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு தீபன் தனது வீட்டு வாசலில் விளக்கு  ஏற்றி வைத்துள்ளார். சில நிமிடங்களில் அதிகமாக காற்றடித்து தீபத்திலிருந்து பறந்த நெருப்பு வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் பைக் மீது பட்டது.

இதனால் காரும், பைக்கும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கார் மற்றும் பைக் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் காரும், பைக்கும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.