கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சி நகரில் ஜார்ஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனம்(75) என்ற மனைவி இருந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தனத்தை அவரது மகள் ஜெயசித்ரா பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கொசு கடிக்காமல் இருப்பதற்காக மூதாட்டியின் படுக்கைக்கு அருகே கொசுவர்த்தியை கொளுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல ஜெயசித்ரா கொசுவர்த்தியை பற்ற வைத்துவிட்டு சென்றார்.

இதனையடுத்து நள்ளிரவு நேரத்தில் கொசுவர்த்தி சுருள் படுக்கையின் மீது விழுந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.