திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் காந்தி நகரில் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று பிரவீன் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வத்தலகுண்டு நோக்கி காரில் சென்றுள்ளார். இதேபோல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வேனில் தேவதானபட்டியில் இருக்கும் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கூலம்பட்டி பிரிவில் சென்ற போது எதிர்பாராதவிதமாக பிரவீன் ஓட்டி வந்த காரும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதியது.

மேலும் சுற்றுலா வேன் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 10 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரவீனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.