பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தந்தை பெரியாரின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் அவரைப்பற்றி அடிப்படை இல்லாத அவதூறுகள் பரப்பப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். பெரியாரை போற்றுவதற்கு ஆயிரம் ஆயிரம் காரணங்கள் இருக்கும் நிலையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளாமல் பெரியாரை சிறுமைப்படுத்தும் வகையிலான எந்த செயலையும் பாமக அனுமதிக்காது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் கதாநாயகர் மகாத்மா காந்தி என்றால் தமிழ் நாட்டின் சமூக விடுதலைப் போராட்டத்தின் கதாநாயகன் தந்தை பெரியார் அவர்கள் தான் தமிழ்நாட்டில் செண்பகம் துரைராஜன் வழக்கில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டபோது சமூக நீதியை காப்பதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்டவர் தந்தை பெரியார் தான். சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் காண இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க கலைஞர் அரசு மறுத்தபோது அதை கண்டித்ததுடன் அரசுக்கு அழுத்தம் கொடுத்து இட ஒதுக்கீடு 31 சதவீதமாக உயர்த்தப்படுவதற்கு காரணமாக இருந்தவர் அவர். அதனால் தான் அவரை கொள்கை வழிகாட்டியாக பாமக ஏற்றிருக்கிறது.

நமது கொள்கையில் உறுதியாக இருந்தாலும் தம்மை தேடி வந்தவர்களின் உணர்வுகளையும் மத நம்பிக்கைகளையும் மதித்தவர். நமது வீட்டுக்கு வந்த திரு.வி.கவின் நம்பிக்கையை மதித்து அவர் இட்டுக் கொள்வதற்காக திருநீர் சம்படத்தை ஏந்தி வந்தவர். அவர் 1927 ஆம் ஆண்டு குடியரசு இதழை தொடங்கிய போது முதலில் இதழிலேயே வள்ளலாரின் வரிகளை பயன்படுத்தியவர். வள்ளலார் சத்திய ஞானசபைக்கு சென்ற போது, அங்கு கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வரலாம் என எழுதப்பட்டிருந்தது. அதை கண்டதும் நான் எல்லா அசைவ உணவையும் சாப்பிடுபவன் உள்ளே வரமாட்டேன் என மறுத்தவர்.

அவரது வரலாறும் சாதனைகளும் மிக நீண்டவை அவற்றை முழுமையாக படிக்காமல் அரைகுறை புரிதல் உடன் அவற்றை விமர்சிப்பதை ஏற்க முடியாது. அவரது புகழ் வெளிச்சத்தை அரைகுறை அவதூறுகளால் ஒருபோதும் மறைக்க முடியாது. தந்தை பெரியாரை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. பெரியாரின் கொள்கைகளில் உடன்பாடு இல்லாதவர்கள் அவரை கொள்கை ரீதியாக விமர்சிக்கலாம் மாறாக அவர் மீது அவதூறு பரப்புவதை அனுமதிக்க முடியாது. இந்த அடிப்படை உண்மையை அனைவரும் புரிந்துகொண்டு அனைவரும் அதற்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறினார்.