மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பங்கங்க்கா காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு தந்தை தன்னுடைய மகளை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். அதாவது செமஸ்டர் தேர்வுக்காக கல்லூரிக்கு சென்ற தன்னுடைய மகள் வீட்டிற்கு வரும்போது சில மர்ம நபர்கள் கடத்திச் சென்றதாக அவர் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட மாணவி பிஏ முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் போலீசார் இது குறித்து விசாரித்து வந்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் கடத்தப்பட்டதாக சொன்ன இடத்திற்கு மாணவி வரவில்லை என்பது தெரிய வந்தது. அதன் பிறகு ஒரு உணவகத்தில் மாணவி அமர்ந்து சாப்பிடும் புகைப்படமும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

இந்த புகைப்படத்தை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி இருக்கும் இடம் தெரிய வந்தது. அதன் பிறகு மாணவியிடம் நடந்ததை போலீசார் கேட்கவே செமஸ்டர் தேர்வில் பெயில் ஆனதால் தன் பெற்றோருக்கு தெரிந்தால் கண்டிப்பார்கள் என்று பயந்து கடத்தல் நாடகத்தை மாணவி அரங்கேற்றியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதைத் தொடர்ந்து மாணவியை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.