தமிழ்நாடு அரசு நடப்பாண்டுக்கான தனது கன்னிப் பொது நிதிநிலை அறிக்கையைச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு துறைகளையும் மேம்படுத்தும் வகையில் பல முக்கியத் திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள முக்கியத் துறைகளின் சிறப்பம்சங்களின் விவரம்.

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படும்.

பிளஸ் ஒன் பயிலும் 5.32 லட்சம் மாணவர்களுக்கு இலவசச் சைக்கிள்களுடன் ஹெல்மெட்டுகளும் சேர்த்து வழங்கப்படும். மாணவர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் இணைக்கப்படுவதுடன், நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையிலான பாடத்திட்ட மேம்பாடும் செய்யப்படும்.

தமிழகத்தில் உள்ள 3,700 அரசுப் பள்ளிகள் நவீனமயமாக்கப்படுவதோடு, பொது நூலகங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக மாற்றப்படும்.

விளையாட்டுத்துறைக்கு ரூ.1,051 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 10 சிறப்பு ஒலிம்பிக் மையங்கள் அமைக்கப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு நாள்தோறும் ஒரு மணி நேரம் விளையாட்டிற்காக ஒதுக்குவது கட்டாயமாக்கப்படுவதுடன், இளம் திறமையாளர்களைக் கண்டறிய மாநிலம் தழுவிய திறனாய்வு முகாம்கள் நடத்தப்படும்.

தமிழக நாட்டுப்புறக் கலைகளை ஊக்குவிக்க ரூ.23 கோடி ஒதுக்கப்பட்டு, 200 கலைக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 100 நாட்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்பு உருவாக்கப்படும். சுற்றுலா மற்றும் பாரம்பரியத் தலங்களை மேம்படுத்த ரூ.775 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை நீர்நிலைகள் மற்றும் கூவம், அடையாறு நறைகளைத் தூர்வாரும் சீரமைப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படும். குடிநீர் வழங்கல் துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுச் சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.21,524 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைப் பராமரிப்பு மற்றும் புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய ‘நம்மா சாலை’ செயலி அறிமுகப்படுத்தப்படும். சென்னையில் இயக்கப்பட உள்ள 1,000 புதிய குளிர்சாதன மின் பேருந்துகளுக்காகவும், மின்வாகனக் கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு, ஓசூர் – கர்நாடக மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு சார்ந்த உபகரணங்கள் வழங்கப்படுவதுடன் தாய் சேய் நலத் திட்டங்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

திருமண உதவித் திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கப்படும். பெண் சுயஉதவிக் குழுக்களுக்கு வட்டி மானியம் அளிக்கப்படும்.

“>

 

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர ஏஐ அடிப்படையிலான நிர்வாக முறையும், வளர்ச்சிக்காகப் புதிய சென்னை பெருநகர மாஸ்டர் பிளானும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.