தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தி  குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. என்னுடைய தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் பற்றி திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது.

மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துக்களை கூற விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். அதனை தொடர்ந்து விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில்  பதிவு செய்து ஒப்புதல் பெற்று அதன் பின் மனுக்களை அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.