திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திமுக மாநாடு நடக்கிறது என்றால் அதனுடைய எழுச்சி என்பது தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இருக்கும். அதிலும் குறிப்பாக அன்பு சகோதரர் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்கள் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு ஏராளமான இளைஞர்கள் கழகத்தை நோக்கி ஈர்க்கப்பட்டு வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

அவர் செல்லும் ஊர்களில் எல்லாம் புதிய புதிய இளைஞர்கள் கழகத்தை நோக்கி வருகிறார்கள். அரசு  இளைஞர்களுக்கு ஏராளமான திட்டங்களை தீட்டி வருகிறது. இதுவும் இளைஞர்களுக்கு திமுக நோக்கி வர வரவழைத்திருக்கிறது. இந்த இளைய பட்டாளத்தை கட்டுக்கோப்பாகவும்,  நம்முடைய திராவிட கொள்கை கொண்டவர்களாகவும் ஆக்குவதற்காக தான் இளைஞர் அணி மாநாட்டை நடத்த வேண்டும் என்று தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

இன்றைக்கு இருக்கிற முதலமைச்சர் இளைஞரணி செயலாளராக 2007 ஆம் ஆண்டு இளைஞரணி முதல் முதல் மாநில மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது. இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் வருகிற டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இது ஒரு நாள் மாநாடாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இளைஞரணி செயலாளர் மாண்புமிகு உதயநிதி அவர்கள் தலைமையி இந்த மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக நான் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறேன். காலை 9 மணி அளவில் கழகத்தில் இரு வண்ணக் கொடியை மகளிர் அணி செயலாளர் திருமதி கனிமொழி எம்பி அவர்கள் ஏற்றி வைக்கிறார்கள், மாணவர் அணி செயலாளர் எழிலரசன் அவர்கள் மாநாட்டை திறந்து  வைக்க உள்ளார்கள். முக்கிய பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகிறார்கள். தலைவர் அவர்கள் மாலை 6 மணிக்கு சிறப்பு உரையாற்றுகிறார்கள்.

இந்த இளைஞர் அணி மாநாடு கழக வரலாற்றில் மட்டுமல்ல,  தமிழ்நாடு – இந்திய வரலாற்றிலும் மிக முக்கியமான மாநாடாக அமையப்போகிறது. அடுத்து வரவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலுக்கு வெற்றிக்கு சேலம் மாநாடு அடித்தளம் அமையும். கிட்டத்தட்ட ஐந்து லட்சம் கழகத் தோழர்கள் இளைஞர் அணி தோழர்கள் வருவார்கள் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்கிறோம்.  இவர்களுக்கு எழுச்சியும்,  உணர்ச்சியும் ஊட்ட இந்த மாநாடு அமையப்போகிறது. அனைவரும் மாநாட்டுக்கு வாருங்கள் என்று அழைப்பது போல ஊடகங்களைச் சேர்ந்த உங்களையும் அழைக்கிறேன் என தெரிவித்தார்.