விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பக்கிரி. இவரது  மகன் அழகுநாதன் (39) டிராவல்ஸ் உரிமையாளராக உள்ளார். இந்நிலையில் அழகுநாதன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்மனு ஒன்று கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆர்கானல் என்ற பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40). டிரைவரான இவர் கடந்த டிசம்பர் மாதம் என்னுடைய டிராவல்ஸ்லில் வேன் டிரைவராக சேர்ந்தார்.

இதனையடுத்து ரமேஷ், தனது நண்பர் ஒருவருக்கு பெங்களூருவில் புதையல் கிடைத்துள்ளது. அதில் ஏராளமான தங்க காசுகள் உள்ளதால், அதனை குறைந்த விலைக்கு தனக்கு வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறினார். உடனே அவரின் பேச்சை நம்பி, கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி ரூ.7 லட்சத்தை ஆர்கானல் சென்று ரமேஷிடம் கொடுத்தேன்.

அப்போது அவரும் 600 கிராம் தங்க காசுகளை எனக்கு வழங்கினார். இதன் பின் வீட்டிற்கு வந்து அவர் கொடுத்த அந்த தங்க காசுகளை சோதனை செய்து பார்த்தேன். அப்போது தான் அது வெறும் போலி காசுகள் என தெரியவந்தது. இது குறித்து ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் மனு கொடுத்தள்ளார். உடனே வழக்குபதிவு செய்த போலீஸ்சார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.