ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 22 மற்றும் 29ஆம் தேதிகளில் தமிழகத்தில் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இந்த அனைத்து மனுகளும் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் மற்றும் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் முகமது ஜின்னா ஆஜராகி வாதிட்டனர்.

அவர்கள் தங்களது வாதத்தில், அனுமதி கோரி RSS அளித்த விண்ணப்பத்தில் போதிய தகவல்கள் குறிப்பிடவில்லை எனவும்,  பேரணிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதி கேட்டுள்ள அதே காலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் பேரணி மற்றும் போராட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி  கோரும் வழித்தடத்தில் மசூதிகள் தேவாலயங்கள்,  மற்றும் குடியிருப்புகள் உள்ளதாகவும்,

அனுமதி கோரிய விண்ணப்பத்தில் அகண்ட பாரதம் கட்டமைப்போம் என கூறியுள்ளதாகவும், அந்த வரைபடத்தில் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை இணைத்துள்ளதாகவும் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அதனால் அரசுக்கு என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பினார் ? அதற்கு பதில் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர்,  இது மிகவும் முக்கியமான விகாரம். இது குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த வேண்டும் என கூறினார்.

பேரணியால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும்,  இந்த பேரணியால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது எனவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த வழக்கின் இறுதியில் தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.