சேலம் அஸ்தம்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 95% அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டது என்று முதல்வர் ஸ்டாலின், ஒரு பச்சை பொய்யை இன்றைக்கு புளுகி  கொண்டிருக்கிறார். இது மக்களிடத்திலே எடுத்துச் சொல்ல வேண்டும்.  அதற்கு தங்களுக்கு கையேடுகள் நாங்கள் கொடுக்கப் போறோம்.

என்னென்ன அறிவிப்புகள் வெளியிட்டிருக்கின்றார்கள் ? திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை  ஏமாற்றிக்கொண்டு இருக்கின்ற விடியா திமுக ஆட்சியில்  என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்ற புள்ளி விவரத்தோடு நீங்கள் மக்களிடத்திலே எடுத்துச் சொல்ல வேண்டும். ஏனென்றால் வேண்டுமென்றே திட்டமிட்டு பத்திரிகைகளிலும்…

நம்முடைய ஊடக நண்பர்கள் இருக்கின்றார்கள்….  நம்மைத்தான் மாற்றி மாற்றி பேசுகிறார்களே ஒழிய,  ஆளுகின்ற கட்சியிலே நடைபெறுகின்ற தவறுகளை அவர்கள் சுட்டிக்காட்டுவது கிடையாது. இதையெல்லாம் மக்களிடத்திலே எடுத்து சொல்வது.  நம்முடைய பூத்து கமிட்டியின் பொறுப்பு. 520 அறிவிப்பு வெளியிட்டு விட்டு, ஒரு பத்து சதவீதம் தான் நிறைவேற்றியுள்ளார்கள்.

எஞ்சிய  90% நிறைவேற்றப்படவில்லை. இதையெல்லாம் மக்களிடத்திலே எடுத்துச் சொல்ல வேண்டும். தேர்தல் வருகின்றபோது கவர்ச்சிகரமாக அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.  கவர்ச்சிகரமாக பேசுவார்கள். மக்களை பேசி பேசி மயக்கி ஆட்சிக்கு வந்தது தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. இதை மக்களிடத்திலே எடுத்துச் சொல்ல வேண்டும்.

இதே நேரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருக்கின்ற பொழுது கொடுக்கப்பட்ட வாக்குறுதியும் நிறைவேற்றினோம். கொடுக்கப்படாத மக்கள் சார்ந்த நன்மைகள்,  அந்த திட்டத்தையும் நாம் அறிவித்தோம். இதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சாதனைகள் என தெரிவித்தார்.