கோவை மாவட்டம் கோவில்பாளையம் என்னும் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவர் இந்து முன்னணி கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவருடைய நண்பர் சந்திரசேகர். இவர் பிளம்பராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் நெருங்கிய நண்பர்களான இவர்கள் வாரந்தோறும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். அந்த வகையில் டாஸ்மாக் பாரில் அமர்ந்து இருவரும் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது போதையில் பேசிக் கொண்டிருந்த இவர்கள் முதல்வரை தரக் குறைவாக பேசி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

அந்த வீடியோவில் முதல்வர் மு க ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, மற்றும் துணை முதல்வர் ஆகியோர்களை பற்றி மிகவும் ஆபாசமாகவும், தவறாகவும், பொய்யான தகவல்களையும் பேசி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் திமுக ஐடி விங் பொறுப்பாளர் சக்திவேல் என்பவர் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் இவர்கள் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் சிவாவையும், அவரது நண்பர் சந்திரசேகரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்களின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.