விருதுநகர் மாவட்டத்தில் கணவன்-மனைவி உயிருடன் இருக்கும் போதே அவர்கள் இறந்து விட்டதாக இறப்பு சான்றிதழ் வாங்கி போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி மீனாட்சியுடன் 35 வருடங்களாக டெல்லியில் வசித்து வரும் நிலையில் இவருடைய மகன் மற்றும் மகள் கோவையில் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு சொந்தமான 9 சென்ட் நிலம் வடக்கு ஆண்டாள்புரம் பகுதியில் அமைந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இவர்கள் நிலத்தை வாங்கப் போவதாக கோவையை சேர்ந்த ஒருவர் நிலத்தை பார்வையிட்டு விட்டு சென்றுள்ளார். இது குறித்து ராஜேந்திரனுக்கு அவர்களுடைய உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அவர்கள் பத்திரபதிவு அலுவலகத்தில் சென்று விசாரித்தபோது மீனாட்சி மற்றும் ராஜேந்திரன் இறந்துவிட்டதாக அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வாங்கி கணேஷ் குமார் என்பவரை வாரிசாக நியமித்து அவர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த மோசடி குறித்த அவர்கள் காவல் நிலையத்திலும் பத்திரபதிவு அலுவலகத்திலும் புகார் கொடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.