பருவம் தவறி பெய்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்ய வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்களுடன் வேளாண்மை துறை செயலாளர் சமய மூர்த்தி, இயக்குனர் அண்ணாதுரை போன்ற அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் பயிர் சேதங்களை ஆய்வு செய்து அதற்கான சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலினிடம் அளித்துள்ளனர்.

இது  குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, அமைச்சர்கள் அரசு உயர் அலுவலர்கள் 5.2.2023 அன்று கன மழையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்தது மட்டுமில்லாமல் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் சந்தித்து விளக்கியதோடு அது தொடர்பான அறிக்கையையும் வழங்கியுள்ளனர். அமைச்சர்களின் கருத்துக்கள் மற்றும் அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலின் பின்வரும் நிவாரணத் தொகுப்பை வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

1. கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் பயிர் செய்த கணக்கெடுப்பு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை துறையால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும்.

2. கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின் படி 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும்.

3. நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயிறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூ.3,000 வழங்கப்படும்.

4. நெல் தரிசில் உளுந்து தெளிந்து கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50% மானியத்தால் ஏக்கருக்கு எட்டு கிலோ பயிர் விதைகள் வழங்கப்படும்.

5. கன மழையால்  பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடன் மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவீத மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படுகிறது.

6. பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பயிர் அறுவடை சோதனைகள் முடிக்கப்பட்டு இருப்பின் கூடுதலாக மீண்டும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.