அலுவலகத்தில் வேலை செய்யாமல் ஊழியர்கள் பொழுதைக் கழிக்கும் வேடிக்கையான காணொலி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்யாமல் நகம் வெட்டுவது, அலைபேசியில் விளையாடுவது மற்றும் கணினியில் திரைப்படங்களைப் பார்ப்பது எனத் தங்கள் விருப்பம் போலச் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

 

ஒரு ஊழியர் தரையில் படுத்துக் கொண்டே அலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், மற்றொருவர் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ரகசியக் கேமராவைத் தற்செயலாகக் கவனித்த ஒரு ஊழியர், உடனடியாக மற்றவர்களையும் எச்சரித்தார்.

கேமராவைக் கண்ட அடுத்த நொடியே தரையில் படுத்திருந்தவர் எழுந்து அமர, மற்ற ஊழியர்களும் தங்களது பொழுதுபோக்குகளை நிறுத்திவிட்டு மிகவும் மும்முரமாக வேலை செய்வது போல நடிக்கத் தொடங்கினர்.

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொலியை இதுவரை 23 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். உரிமையாளர் ரகசியமாகப் பொருத்திய கேமராவில் ஊழியர்களின் சாயம் வெளுத்த இந்தச் சம்பவம் இணையத்தில் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.