இந்தியாவில் நடத்தப்படும் சிபிஆர்எஃப் காவலர் ஆட்சேர்க்கைக்கான கணினி வழி தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், சிபிஆர்எஃப் தேர்வில் மொத்தம் உள்ள 9,212 இடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்பட இருக்கிறது.

இருப்பினும் தேர்வில் மொத்தமுள்ள 100 மதிப்பெண்களில் 25 மதிப்பெண்கள் இந்தி மொழி அடிப்படை புரிதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர், சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய் மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. துணை ராணுவ படையில் பணியாற்ற விரும்பும் தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவை பறிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே தமிழ் உட்பட பிற மாநில மொழிகளிலும் சிபிஆர்எஃப் தேர்வை நடத்த வேண்டும் என வலியுறுத்திக் கொள்கிறேன் என கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.