சென்னை வானகரம் ஸ்ரீவாரு ஸ்ரீ வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுகவின் செயற்குழு –  பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதைத்தொடர்ந்து பொதுக்குழுவில் பேசி வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,

நம் எதிரிகளோடு கைகோர்த்து துரோகிகளும் இணைந்து கொண்டார்கள். இருவரும் சேர்ந்து இயக்கத்தை உடைக்க எவ்வளவு முயற்சி செய்தார்கள்? அத்தனையும் உங்களுடைய துணையோடு,  இரு பெரும்  தலைவர்களுடைய அருள் ஆசியோடு வென்று காட்டினோம்.

ஒவ்வொரு முறையும் பொதுக்குழு நடைபெறுகின்ற போதெல்லாம் ஒரு உணர்வு பூர்வமாக நம்முடைய முகத்தில் ஏதோ ஒரு பதற்றத்தோடு, நாம் பொதுக்குழுவை சந்திப்போம். ஆனால் இந்த பொதுக்குழு அனைவருடைய முகத்திலும் மகிழ்ச்சி பொங்குகிறது. இரு பெரும்  தலைவர்களுடைய சக்தி நமக்கு வெற்றியை தந்து கொண்டிருக்கிறது.

நீதிமன்றத்திலும் நீதி வென்று விட்டது. அதேபோல தேர்தல் கமிஷனிலும் நமக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது. இனி அனைத்திந்திய அண்ணா திமுக விட முன்னேற்றக் கழகம் ஜெட் வேகத்தில் செயல்படும். தமிழகத்தில் அதிக தொண்டர்கள் கொண்ட ஒரே இயக்கம் அனைத்திந்திய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம்.

இந்த இயக்கம் வலிமையாக இருக்கின்ற காரணத்தினால் இந்த இயக்கம் மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் அதிகமானோர் அனைத்திந்திய  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இன்றைக்கு இணைந்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.