திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் அய்யம்பேட்டை கிராமத்தில் ஆரிமுத்து(54) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2005-ஆம் ஆண்டு ஆரிமுத்து கீழே அய்யம்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆரணி நோக்கி சென்ற அரசு பேருந்து ஆரிமுத்து மீது மோதியது. இந்த விபத்தில் ஆரிமுத்து படுகாயமடைந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஆரிமுத்துவுக்கு 72,556 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

அதன் பிறகும் நஷ்ட ஈடு வழங்கப்படாததால் ஆரிமுத்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆரிமுத்துவுக்கு 1 லட்சத்து 75 ஆயிரத்து 650 ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என  உத்தரவிட்டது. அதன் பிறகும் நஷ்ட ஈடு வழங்காததால் நீதிபதியின் உத்தரவின் படி மேல்மருவத்தூர் சென்று கொண்டிருந்த பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.