நீலகிரி மாவட்டத்தில் உள்ள சீ போர்த் பகுதியில் நவ்ஷாத்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை நவ்ஷாத் அதே பகுதியில் வசிக்கும் ஜமால் என்பவருடன் தனியார் எஸ்டேட் காப்பி தோட்ட பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த காட்டு யானை இரண்டு பேரையும் விரட்டியது. இதனால் இருவரும் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்த ஓட்டம் பிடித்தனர்.

ஆனாலும் காட்டு யானை விரட்டி சென்று இருவரையும் தாக்கியது. இதனால் நவ்ஷாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் யானையை விரட்டி படுகாயமடைந்த ஜமாலை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற நவ்ஷாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்ல முயன்றனர்.

அப்போது காட்டு யானையை பிடிக்க வலியுறுத்தி உடலை எடுக்க விடாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.