நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டெருமைகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். நேற்று குன்னூர் உழவர் சந்தை பகுதியில் இருக்கும் குடிநீர் கிணறு பகுதிக்கு வந்த காட்டெருமை எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்து விட்டது.

இதுகுறித்து அறிந்த வனத்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் காட்டெருமையின் உடலை மீட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இறந்தது 2 வயதுடைய ஆண் காட்டெருமை. கால்நடை டாக்டர் மூலம் பிரேத பரிசோதனை செய்து காட்டெருமையின் உடல் குழிதோண்டி புதைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.