கோயம்புத்தூரில் உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மண்டபத்தில் மாற்று கட்சியினர் திமுகவில் சேரும் விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் நம்முடைய ஒரே நோக்கமாக இருக்க வேண்டும் என்று கூறினார். அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, மாற்று கட்சியிலிருந்து விலகியவர்களை திமுக தாயுள்ளத்தோடு ஏற்றுக் கொள்ளும்.

மதம் மற்றும் ஜாதியை பயன்படுத்தி கலவரத்தை தூண்டி ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது. அதைப் பற்றி எல்லாம் நாம் கவலைப்படாமல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்ற வேண்டும். 40 தொகுதிகளிலும் திமுக வெல்ல வேண்டும். மதசார்பற்ற கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அமைய வேண்டும் என்று கூறினார். மேலும் அனைத்து மாநிலங்களிலும் மதசார்பற்ற கூட்டணி அமையும் நோக்கத்தில் நாங்கள் செயல்பட போகிறோம். அதற்கு நீங்கள் பக்கபலமாக இருந்து எங்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று கூறினார்.