அதிமுக கட்சியின் சார்பில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் பொன்னையன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் கருணாநிதி, அவருடைய மகன் ஸ்டாலின், அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பொய் மட்டுமே கூறி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 27 ஆயிரம் ரூபாய் திமுகவினர் கொடுத்துள்ளனர்.

இந்த 2 வருட ஆட்சியில் கொள்ளையடித்த பணம், 15 வருடங்களாக டெல்லியில் கொள்ளை அடித்த பணம் என ஒரு ஓட்டுக்கு 27 ஆயிரம் ரூபாயை திமுகவினர் கொடுத்துள்ளனர். இது போக ஒரு வீட்டில் உள்ள குழந்தைகள் உட்பட அனைத்து உறுப்பினர்களுக்கும் 3 வேளையும் அசைவ உணவு கொடுத்துள்ளனர். அவர்கள் மக்களைக் கேவலப்படுத்தி அரசியலை குட்டி சுவராக்கி பெற்றிருக்கக் கூடிய வெற்றி வெற்றியே கிடையாது. மேலும் இந்தியாவே காரி துப்புகின்ற அளவில் இருக்கிற இந்த கேவலமான திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற வெறி உணர்வுடன் மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனக் கூறியுள்ளார்.