சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் 6 மாணவ மாணவிகள் காரில் கே.வி.கே குப்பம் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் கரையோரம் கற்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டே செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனையடுத்து கடலில் இறங்கி குளித்த போது ராட்சத அலையில் சிக்கிய மாணவ-மாணவிகள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். அதில் 2 பேர் மட்டும் கரைக்கு திரும்பி வந்தனர். மற்ற 4 பேரும் அலையில் சிக்கிக் கொண்டதால் அவர்களால் நீந்தி கரைக்கு வர முடியவில்லை.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தொட்டிக்குப்பத்தை சேர்ந்த வசந்த், கோபி, தேசப்பன் உள்ளிட்ட மீனவர்கள் வலை மற்றும் கயிறுகளை கடலுக்குள் வீசி 4 பேரையும் பத்திரமாக மீட்டனர். அந்த மாணவ- மாணவிகள் குடும்பத்தினருக்கு தெரியாமல் கடற்கரை வந்தது தெரியவந்தது. இதனால் மீனவர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மீனவர்கள் வலை, கயிறுகளை வீசி மாணவர்களை மீட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.