கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனுஷ் என்பவர் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரது அண்ணன் குடும்பத்துடன் துடியலூரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் விடுமுறை தினத்தை முன்னிட்டு தனுஷ் தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வெளியே செல்வதாக கூறி தனுஷ் அண்ணனின் காரை வாங்கி சென்றார்.

இந்நிலையில் சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தனுஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தனுஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.