சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி பகுதியில் லோகேஷ்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் எம்.பி.ஏ 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சூடோ பயிற்சிக்காக சென்ற லோகேஷ் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் தங்களது மகனை காணவில்லை என புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே நேற்று காலை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் லோகேஷ் சடலமாக கிடந்துள்ளார். இது பற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று லோகேஷின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். லோகேஷ் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து உடலை கடலில் வீசி சென்றார்களா? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.