சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் மெட்ரோ ரயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும். அதனால் விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் பயணிகள் ஆலந்தூர் அறிஞர் அண்ணா ரயில் நிலையத்தில் மாறி விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.

அதேபோல் விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் பயணிகள், ஆலந்தூர் அறிஞர் அண்ணா ரயில் நிலையத்தில் மாறி கோயம்பேடு ஷெனாய் நகர் எழும்பூர் மற்றும் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். இது தவிர இரண்டு வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.