திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சௌந்தர பாண்டியபுரத்தில் ரூபசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா காவல்கிணறு பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார்.

இந்நிலையில் திவ்யா மொபட்டில் தெற்கு கள்ளிகுளத்திற்கு சென்று வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2  வாலிபர்கள்  திவ்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து திவ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.