உத்தரப்பிரதேசம் கோரக்பூரில், இரண்டு டிரெய்லர் டிரக்களுக்கு இடையில் மஹிந்திரா பொலேரோ சிக்கி நசுங்கிய பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் திங்கள்கிழமை மாலை நடந்தது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளில், ஒரு பொலேரோ கார் முன்னால் சென்ற டிரெய்லரின் பின்னால் சென்று கொண்டிருக்க, அந்த டிரெய்லர் திடீரென பிரேக் போட்டதால், பொலேரோவும் நிற்கிறது. அப்போது, பின்புறம் வந்த இன்னொரு டிரெய்லர் நேராக மோதியதில், கார் இரண்டு டிரெய்லர்களுக்கு இடையில் நசுங்கியது.

அதிர்ஷ்டவசமாக, கார் ஓட்டுநர் தின்பந்து மற்றும் பயணி ரித்தேஷ் சிங் உயிர் தப்பினர். அங்கு இருந்த மக்கள் விரைந்து வந்து, காரின் கதவை உடைத்து இருவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

விபத்துக்குப் பிறகு, இரண்டு டிரெய்லர் ஓட்டுநர்களும் ஒரு டிரெய்லரில் தப்பிச் சென்றனர். தகவல் கிடைத்ததும், சர்ஹாரி புறக்காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, ஒரு டிரெய்லரை கைப்பற்றி, மற்றொன்றைத் தேடி வருகின்றனர்.

இந்த விபத்தில் கார் முழுமையாக சேதமடைந்தது. உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதால் நிம்மதி ஏற்பட்டுள்ளது. இதேபோல், கர்நாடகாவின் சித்ரதுர்காவில் சமீபத்தில் இரண்டு அரசு பேருந்துகளுக்கு இடையில் ஒரு ஆட்டோ சிக்கிய சம்பவமும் நடந்தது. கோரக்பூர் விபத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி, பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.