நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை கடை தெருவில் சுமார் 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த மின்மாற்றி ஒன்று அமைந்துள்ளது. இந்த மின்மாற்றியிலிருந்து திருமருகல் பகுதிகளில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதால் நோயாளிகள் பலர் இந்த வழியாக சென்று வருகின்றனர்.

மேலும் ஆம்புலன்ஸ், பஸ், தீயணைப்பு வாகனங்கள் சென்று வருவதால் போக்குவரத்து அதிகம் இருக்கும் இந்த சாலையில் மின்மாற்றி சேதமடைந்து இருக்கிறது. மின்மாற்றியின் இரண்டு பக்க மின்கம்பிகளும் சேதம் அடைந்து சிமெண்ட் காரைகள் முழுவதும் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இந்த மின்கம்பங்கள் எந்த நேரத்திலும் சாய்ந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் இருக்கிறது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.