விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது

சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இருந்து விஜயகாந்த் உடல் வடபழனி வழியாக அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு பாதை அமைத்து அனைவரையும் ஒருங்கிணைந்தவர் கேப்டன் விஜயகாந்த், முன்னாள் முதல்வர்கள் கலைஞர், எம்ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் அன்பு பாராட்டியவர் விஜயகாந்த் என தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.