விஜயகாந்த் மறைவிற்கு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்..

சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், தேமுதிக நிறுவனர் திரு விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்..

இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், திரு விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது கவர்ச்சியான நடிப்பு மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது. ஒரு அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர், பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

அவரது மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது, அது நிரப்ப கடினமாக இருக்கும். அவர் நெருங்கிய நண்பராக இருந்தார், பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் ஏராளமான பின்தொடர்பவர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி” என பதிவிட்டுள்ளார்.