திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ரவி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது ஜீன் ஜோசப் என்பவர் ஆளுநர் கையால் பட்டத்தை வாங்க மறுப்பு தெரிவித்து துணைவேந்தரின் கையால் பட்டத்தை வாங்கிக் கொண்டு கீழே இறங்கினார்.
இது அங்கிருப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. மேடையில் இருந்து கீழே இறங்கிய மாணவியிடம் இது குறித்து கேட்டபோது ஆளுநர் தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படுவதால் அவர் கையால் பட்டத்தை பெற விரும்பவில்லை என மாணவி கூறியுள்ளார்.
இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் திரு. ராஜன் என்ற நபரின் மனைவி, திருமதி. ஜீன் ஜோசப் என்பவர், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.
காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுகவின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என, தனது கட்சியினருக்கு, முதலமைச்சர் திரு ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும். திமுகவைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம். அவர்களும் இதே போன்று நடந்து கொண்டால், முதலமைச்சர் திரு @mkstalin, தனது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்? என பதிவிட்டுள்ளார்.
