அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.

மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது. அதேபோல 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வு டிசம்பர் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் 11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம்  வகுப்புகளுக்கும் டிசம்பர் 13ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

முன்னதாக அரையாண்டு தேர்வு 13ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் அறிவுரைகளின்படி மிக்ஜாம் புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து வரும் 11.12 2023 (திங்கட்கிழமை) அன்று பள்ளி திறக்கும் நாளில் நல்ல கற்றல் சூழலை உருவாக்கும் விதமாக பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன இவற்றை கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறையை சார்ந்த 17 அதிகாரிகள் 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இப்பணிகளுக்காக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாயும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 40 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தங்களது பாடப் புத்தகம் மற்றும் நோட்டு புத்தகம் உள்ளிட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் சீருடை மற்றும் புத்தகப்பை போன்ற பொருட்களை வழங்க நாளை (திங்கட்கிழமை -11 12.2023) மாணவர்களின் தேவைகளை கண்டறிந்து (செவ்வாய்க்கிழமை -12.12 2023) அன்று பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே 11.12.2023 அன்று அரையாண்டு தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில், புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்ற நிலையினை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் நாளை திங்கட்கிழமை (11. 12. 2023) தொடங்கவிருக்கும் தேர்வுகளை புதன்கிழமை (13.12.2023) அன்று தொடங்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித் துறையால் அரையாண்டு தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையை வெளியிட மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.