புதுச்சேரி வில்லியனூர் அருகில் கணுவாப்பேட்டையில் வசித்து வருபவர் ரங்கசாமி. இவரது மகன் செந்தில்குமார்(46) பாஜக பிரமுகர் ஆவார். இந்நிலையில் செந்தில்குமார் நேற்றிரவு மங்கலம் தொகுதி அரியூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்ற பின், வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தனியார் பேக்கரி கடையில் டீ குடித்துகொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்தபடி 9 பேர் கொண்ட கும்பல் வந்தது.

அவர்கள் திடீரென்று நாட்டு வெடி குண்டை செந்தில்குமார் மீது வீசினர். இதன் காரணமாக சுதாரித்துகொண்ட செந்தில்குமார் அங்கிருந்து தப்பியோட முயன்றார். எனினும் வெடிகுண்டு வீச்சில் நிலைகுலைந்து கீழே சரிந்த செந்தில்குமாரை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதனால் செந்தில்குமார்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனிடையே கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 7 பேர் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணைந்துள்ளனர். முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.