செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன், வர இருக்கின்ற 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல,  அகில இந்திய அளவில் பாஜகவை ஆட்சி பீடத்திலிருந்து அப்புறப்படுத்துவோம் என்கின்ற நம்பிக்கை உள்ளது. அதிலும் குறிப்பாக பெரும்பான்மை இந்துக்களால் பாஜக ஆட்சி தூக்கி எறியப்படும்.

நாடும் – மக்களும், அரசியலமைப்பு சட்டமும் பாதுகாக்கப்படும் என்று நான் பெரிதும் நம்புகின்றேன். இந்த கருத்தை மேலும் மேலும் வலிமைப்படுத்தும் வகையில் எனது மணிவிழா நிறைவு மாநாடு வருகின்ற அக்டோபர் முதல் வாரத்தில் திருச்சிராப்பள்ளியிலே  ”வெல்லும் ஜனநாயகம்” என்னும் பெயரில்,  ஒரு மாபெரும் மாநாட்டை நடத்த இருக்கின்றோம்.

தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான…  தமிழகத்தைச் சார்ந்த கூட்டணி கட்சித் தலைவர்களும்,  தேசிய அளவிலான தலைவர்களும் அந்த நிகழ்விலே பங்கேற்க அழைப்பு விடுக்க திட்டமிட்டு இருக்கிறோம். ஆகவே இந்த பிறந்த நாளை வெறும் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று கருதாமல்,  ஜனநாயக சக்திகளை ஐக்கியபடுத்துவதற்கான உறுதிமொழி ஏற்கின்ற நாளாக கடைபிடிக்கிறோம்.

விடுதலை சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணி…. திமுக கூட்டணியே அங்கம் வகிக்கும் ”இந்தியா” கூட்டணி  இன்றைக்கு இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய ஒரு மாபெரும் சக்தியாக பரிணமித்திருக்கிறது என்பதை எண்ணி பெருமைப்படுகிறேன். அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும், சனாதன சக்திகளை விரட்டியடிப்பதற்கு உறுதி ஏற்க வேண்டும் என்றும்,  அணி திரள வேண்டும் என்றும் இந்த நல்ல நாளில் நான் அறைகூவல் விடுகிறேன் என தெரிவித்தார்.