கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் திமுக அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கிறது.

இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் திமுக அரசை கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில் 01.08. 2023 அன்று நடைபெறவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பங்கெடுக்கிறது. தேனியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மிகவும் நேசித்த இடமான கோடநாட்டில் அவரது மறைவிற்குப் பின் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஆட்சிக்கு வந்த 90 நாட்களுக்குள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தருவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், இவ்வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத வகையில், மெத்தனப் போக்கோடு தூங்கி வழியும் திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் உள்ள அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் 01.08.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10:30 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளனர்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனது ஆதரவை தெரிவித்திருந்த நிலையில், தேனியில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களுடன் இணைந்து கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்க உள்ளார்.

தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த கழக மாவட்டத்தைச் சார்ந்த தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்களது அணியினருடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.