சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கரப்பட்டி பகுதியில் முருகன்-பவித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொட்டப்பட்டியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பவித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் திடீரென குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தர்மபுரியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெண் குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் குழந்தை இறந்ததாக குற்றம் சாட்டி மருத்துவமனை முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த சம்பவம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.