2023-ஆம் வருடத்துக்கான ஆசிய கோப்பை தொடர் உலக கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெறவுள்ளது. நடப்பு ஆண்டு ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றது. எனினும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடர் நடந்தால் இந்தியா அதில் பங்கேற்காது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. அதன்பின் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடரை நடத்துவதாகவும், இந்தியா கலந்துகொள்ளும் ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்துவதாகாவும் தகவல் வெளியாகியது.

ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானுக்கு பதில் இலங்கையில் நடத்துவதற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவுக்குரிய ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்தலாம் என்ற பாகிஸ்தானின் யோசனையை இலங்கை மற்றும் வங்கதேச நாடுகள் ஏற்க மறுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய வீரர்கள் வேற்றுகிரகவாசிகளா என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத்கான் தெரிவித்து உள்ளார். இதுபற்றி ஜுனைத் கான் கூறியிருப்பதாவது, பாகிஸ்தானில் நிலைமை நன்றாக இருக்கிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து என மற்ற அணிகள் வந்தாலும் பாதுகாப்பு பிரச்சனை இல்லையெனில், இந்தியாவுக்கு என்ன பிரச்சனை? காரணம் என்ன? அவர்கள் வேறொரு உலகத்தைச் சேர்ந்த வேற்றுகிரகவாசிகளா? என ஐசிசி இந்த பிரச்சினைகளை கவனிக்கவேண்டும். பாகிஸ்தான் இன்றி கிரிக்கெட் சாத்தியமில்லை. இதில் பாகிஸ்தான் ஒரு சிறிய அணியல்ல. சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் உலகின் நம்பர்-1 அணியாக இருந்தது” என்று அவர் கூறினார்.