தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயரில் கடந்த 3 தினங்களாக ஒரு ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. அந்த ஆடியோவில் முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதியும் மருமகன் சபரீசனும் சேர்ந்து ஒரே வருடத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர் என்றும் இந்த பிரச்சனையிலிருந்து எப்படி தப்பிக்க முடியும் என்று அமைச்சர் பீடிஆர் டெல்லி செய்தியாளர் ஒருவரிடம் பேசியது போன்று அமைந்திருந்தது. இந்த ஆடியோ குறித்து அமைச்சர் பிடிஆர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் ஆடியோவை தடவியல் ஆய்வுக்கு அனுப்பி அது போலி என்ற ஸ்க்ரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளார்.

அதோடு நான் பேசியதாக பகிரப்படும் இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது. இது போன்ற ஆடியோவை தற்போது யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். நான் இப்படிப்பட்ட விஷயங்களுக்கு விளக்கம் கொடுப்பதில்லை. ஆனால் தற்போது விளக்கம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தார்மீக கொள்கைகள் எதுவும் இல்லாத அரசியல்வாதிகளால் இந்த ஆடியோ திரும்பத் திரும்ப பகிரப்படுகிறது. பொது வாழ்க்கையில் நான் செய்த அனைத்தும் எங்கள் தலைவர் முதல்வர் ஸ்டாலினால்தான். மேலும் எங்களை பிரிப்பதற்கான எந்த முயற்சிகளும் ஒருபோதும் வெற்றி பெறாது என கூறியுள்ளார்.